மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூரில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது - மத்திய அரசு
மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூரில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர் மற்றும் இந்தோரில் கொரோனா தொற்று பாதிப்புகள் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகவும், ஊரடங்கு விதிகளை அலட்சியப்படுத்தினால் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், கொரோனா தடுப்புப் பணியாளர்கள் தாக்கப்படுவதுடன், சமூக விலகியிருத்தல் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த 4 மாநிலங்களில் கொரோனா தொற்று நிலைமையை ஆய்வு செய்து தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்காக 6 குழுக்களை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது
Related Tags :
Next Story