காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2020 9:00 PM GMT (Updated: 10 Jun 2020 7:34 PM GMT)

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார்கள். இதனை தடுத்து நிறுத்தும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தெற்குகாஷ்மீரின் சோபியான் பகுதியில் உள்ள சுகூ ஹோண்டோ கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்தப்பகுதியில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டது. மேலும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டது.

நள்ளிரவு தொடங்கிய இந்த தேடுதல் வேட்டை நேற்று காலை 5.30 மணி வரை நீடித்தது. பாதுகாப்பு படையினர் வீடுவீடாக சென்று சோதனையிட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் துப்பாக்கி சண்டை நடந்த இடத்தை வீரர்கள் பார்வையிட்டபோது அங்கு மேலும் 2 பயங்கரவாதிகள் இறந்து கிடந்தனர். இதன்மூலம் நேற்று நடந்த தாக்குதலில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 வாரங்களாக நடந்த தேடுதல் வேட்டையில் இதுவரை 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Next Story