இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை


இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 11 Sep 2021 1:08 AM GMT (Updated: 11 Sep 2021 1:08 AM GMT)

இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே 2+2 பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

புதுடெல்லி,

இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள், ‘குவாட்’ கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இவற்றில், இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 2+2 பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய ராணுவ மந்திரி, இந்திய ராணுவ மந்திரியுடனும், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி, இந்திய வெளியுறவுத்துறை மந்திரியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

இதற்காக, ஆஸ்திரேலிய ராணுவ மந்திரி பீட்டர் டட்டான், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மரிஸ் பய்னே ஆகியோர் நேற்று டெல்லி வந்து சேர்ந்தனர். 2+2 பேச்சுவார்த்தைக்கு முன்பாக, நேற்று ஆஸ்திரேலிய ராணுவ மந்திரி பீட்டர் டட்டானுடன் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தநிலையில், 2+2 பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. ராஜ்நாத்சிங்-பீட்டர் டட்டான் இடையிலும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்-மரிஸ் பய்னே இடையிலும் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை மேலும் ஸ்திரப்படுத்துவது குறித்து இருநாட்டு மந்திரிகளும் ஆலோசனை நடத்துகிறார்கள். கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் விவாதிக்கிறார்கள்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும் பேசுகிறார்கள். இதுதவிர, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள உள்ளனர்.

Next Story