லகிம்பூர் விவகாரம்: நாளை ஜனாதிபதியை சந்திக்கிறார் ராகுல் காந்தி!


லகிம்பூர் விவகாரம்: நாளை ஜனாதிபதியை சந்திக்கிறார் ராகுல் காந்தி!
x
தினத்தந்தி 12 Oct 2021 8:00 AM GMT (Updated: 12 Oct 2021 8:00 AM GMT)

லகிம்பூர் விவகாரம் தொடர்பாக, நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் சந்திக்க உள்ளனர்.

புதுடெல்லி, 

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆஷிஷ் மிஸ்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா தற்போது சிறையில் உள்ளார். லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா தனது பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் லகிம்பூர் விவகாரம் தொடர்பாக நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான குழுவினர் சந்திக்க உள்ளனர்.  லகிம்பூர் சம்பவத்தில் நியாயமான விசாரணை நடத்தக் கோரி குடியரசு தலைவரை நாளை காலை 11 மணிக்கு சந்தித்து மனு அளிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Next Story