கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் - சுகாதார துறை மந்திரி


கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் - சுகாதார துறை மந்திரி
x
தினத்தந்தி 26 Jan 2022 9:27 AM GMT (Updated: 26 Jan 2022 9:27 AM GMT)

கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்று சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனாவின் 3-வது அலையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 55 ஆயிரத்து 475 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் தொற்று சதவீதம் 49.40 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:-

கேரளாவில் நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2-ல் ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்திருப்பதும் இப்போதுதான் நடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் உள்ளனர். நோய் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அவர்கள் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story