வாலிபரை தாக்கிய வழக்கில் பஜ்ரங்தள அமைப்பினர் 4 பேர் கைது
![வாலிபரை தாக்கிய வழக்கில் பஜ்ரங்தள அமைப்பினர் 4 பேர் கைது வாலிபரை தாக்கிய வழக்கில் பஜ்ரங்தள அமைப்பினர் 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/04/1272382-arrested2.webp)
புத்தூரில் கல்லூரி மாணவியுடன் குளிர்பானம் குடித்த வாலிபரை தாக்கிய வழக்கில் பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
புத்தூரில் கல்லூரி மாணவியுடன் குளிர்பானம் குடித்த வாலிபரை தாக்கிய வழக்கில் பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவர்
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் டவுன் மரியல் காட்டுமனை பகுதியைச் சேர்ந்தவர் முகமது பாரீஷ்(வயது18). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பி.யூ.கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். முகமதுவும், அவருடன் படிக்கும் ஒரு மாணவியும் நண்பர்களாக பழகி வருகிறார்கள். இந்த நிலையில் அந்த மாணவியும், முகமதுவும் அப்பகுதியில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க சென்றனர். பின்னர் 2 பேரும் ரெஸ்டாரண்டில் குளிர்பானம் குடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த கும்பல் முகமதுவை தனியாக அழைத்து சென்று சரமாரியாக தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4 பேர் கைது
விசாரணையில் முகமது மீது தாக்குதல் நடத்தியது பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து ரெஸ்டாரண்டில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் முகமதுவை தாக்கியதாக தர்பேதட்கா சிர்தா பகுதியைச் சேர்ந்த பிரதீப்(வயது 19), திங்கலடியைச் சேர்ந்த தினேஷ் கவுடா(25), குத்துமானைச் சேர்ந்த நிஷாந்த் குமார்(19), கோட்டாறு மனேயைச் சேர்ந்த பிரஜ்வல்(23) ஆகிய 4 பேரையும் புத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முகமது இந்து மதத்தை சேர்ந்த பெண்ணிடம் பேசியதாக அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது என தெரியவந்துள்ளது.