பிரதமர் மோடியின் உரைகள் தொகுப்பு நூல் - மத்திய மந்திரி வெளியிட்டார்


பிரதமர் மோடியின் உரைகள் தொகுப்பு நூல் - மத்திய மந்திரி வெளியிட்டார்
x

பிரதமர் மோடியின் உரைகள் தொகுப்பு நூலை மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்குர் வெளியிட்டார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தனது 2-வது பதவிக்காலத்தில் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021 மே மாதம் வரை மற்றும் 2021 ஜூன் முதல் 2022 மே மாதம் வரை ஆற்றிய உரைகள் மற்றும் அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட 'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்' என்ற புத்தகங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவு தொகுத்துள்ளது. இதனை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை மந்திரி அனுராக்சிங் தாக்குர் மற்றும் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் போபாலில் உள்ள குஷாபவ் தாக்ரே சர்வதேச மாநாட்டு மையத்தில் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் அனுராக்சிங் தாக்குர் பேசும்போது, "பிரதமர் மோடியின் உரைகள் தொடர்ந்து உத்வேகத்தை அளித்து வருகின்றன. அவரது ஒவ்வொரு உரையிலும் கற்றுக்கொள்ள வேண்டிய மதிப்புமிக்க பாடங்கள் நிறைய உள்ளன" என்று கூறினார். இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த புத்தகத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணைச்செயலாளர் விக்ரம் சஹாய் வரவேற்று பேசினார். கஜுராஹோ எம்.பி. வி.டி.சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதிப்பகப்பிரிவின் தலைமை இயக்குனர் அனுபமா பட்நாகர் நன்றி கூறினார்.


Next Story