சிருங்கேரியில் வருகிற 27-ந் தேதி போராட்டத்துக்கு அழைப்பு
![சிருங்கேரியில் வருகிற 27-ந் தேதி போராட்டத்துக்கு அழைப்பு சிருங்கேரியில் வருகிற 27-ந் தேதி போராட்டத்துக்கு அழைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/11/24/999926-protest-tamil.webp)
அரசு ஆஸ்பத்திரி கட்ட வலியுறுத்தி சிருங்கேரியில் வருகிற 27-ந் தேதி போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி அரசு ஆஸ்பத்திரி வசதி இல்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழு ஒன்றை அமைத்து சிருங்கேரியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட அரசு ஆஸ்பத்திரி கட்டவேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரி இதுவரை கட்டப்படவில்லை. இதுதொடர்பாக கடந்த 4 மாதத்திற்கு முன்பு சிருங்கேரியில் முழுஅடைப்பு போராட்டமும் நடந்திருந்தது. ஆனாலும் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், அந்தப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதாவது வருகிற 27-ந்தேதி அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுபற்றி போராட்ட குழுவினர் சிருங்கேரி நகர் முழுவதும் ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி அறிவித்து வருகின்றனர். முக்கிய சந்திப்பு பகுதிகளிலும் தண்டோரா மூலம் போராட்டத்தில் கலந்துகொள்ள வரும்படி மக்களை அழைத்துள்ளனர். வருகிற 27-ந்தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிருங்கேரி வர உள்ளார். இதனால் அவரது கவனத்தை ஈர்க்க இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.