'வளர்ந்த இந்தியாவுக்காக கனவு காணுங்கள்' குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுறுத்தல்


வளர்ந்த இந்தியாவுக்காக கனவு காணுங்கள் குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுறுத்தல்
x

புதிய மற்றும் வளர்ந்த ஒரு இந்தியாவுக்காக கனவு காணுமாறு குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நேற்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தன்னை சந்திக்க வந்த குழந்தைகளை ஜனாதிபதி வாழ்த்தினார்.

பின்னர் அவர்களிடம் பேசும்போது ஜனாதிபதி கூறியதாவது:-

குழந்தை பருவம், வாழ்க்கையின் முக்கிய கட்டமாகும். குழந்தைகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவே அவர்களை உயிர்ப்புடன் ைவத்திருக்கிறது. குழந்தைகளின் இந்த அப்பாவித்தனத்தையும் தூய்மையையும் இன்று நாம் கொண்டாடுகிறோம்.

ஒவ்வொரு தலைமுறையும் புதிய சாத்தியங்களையும், புதிய கனவுகளையும் கொண்டு வருகிறது. இது ஒரு தொழில்நுட்பம் மற்றும் தகவல் புரட்சிக்கான சகாப்தம் ஆகும்.

குழந்தைகள் தற்ேபாது பல்வேறு உள்நாட்டு, சமூக, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அறிந்து வைத்திருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் வருகையால், அறிவும், தகவல்களும் இப்போது விரல் நுனியில் உள்ளன.

எனவே அவர்களுக்கு சரியான மதிப்பீடுகளை கற்பிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வதும், பல்வேறு செயல்பாடுகள் மற்றும் விவாதங்களில் அவர்களை ஈடுபடுத்துவதும் மிக முக்கியமானது. குழந்தைகளிடமிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

குழந்ைதகளே நீங்கள் பெரிதாக கனவு காணுங்கள். ஒரு புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவுக்காக கனவு காணுங்கள். இன்றைய அந்த கனவுகள் நாளை நனவாகும்.

நீங்கள் வளரும்போது எந்த மாதிரியான இந்தியாவில் வாழ விரும்புகிறீர்கள் என்று சிந்தியுங்கள். பலனைப்பறறி கவலைப்படாமல் உங்கள் கடமையை செய்து வாருங்கள். இது தானாகவே உங்களை மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டு செல்லும்.

இன்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை வருகிற நாட்களில் இந்தியாவின் பயணத்தை முடிவு செய்யும். நீங்கள் வளரும்போதும் உங்களுக்கு உள்ளே இருக்கும் குழந்தைத்தனத்தை உயிர்ப்புடன் வைத்திருங்கள். இந்தியாவின் கலாசாரத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் பெற்றோரை எப்போதும் மதியுங்கள். தாய்நாட்டையும் எப்போதும் நேசியுங்கள்.

இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.


Next Story