சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய உடனடி முன்பதிவு ரத்து


சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய உடனடி முன்பதிவு ரத்து
x

சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை,

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் சீசன் காலங்களில் அய்யப்பனை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் நடப்பு சீசனையொட்டி கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்கிறார்கள்.

கூட்ட நெரிசல்

ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில் ஒரு சில நாட்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் இருந்தது. இதுபோக நிலக்கல் உள்பட பல இடங்களில் உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

ஒரு கட்டத்தில் பம்பை முதல் சன்னிதானம் வரை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிறு குழந்தைகள், 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதை தொடர்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என கேரள ஐகோர்ட்டு திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் அரசுக்கு கேள்வி எழுப்பியது.

1 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

பின்னர் கூட்ட நெரிசலை தவிர்க்க தினசரி தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். இதனால் நேற்று மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை என்னாச்சு? என கேள்வி எழுந்தது.

உடனடி முன்பதிவு ரத்து

இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், "சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நேற்றைய தினம் ஏற்கனவே (கட்டுப்பாடுக்கு முந்தைய) 1 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள். இதனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உடனடி தரிசன முன்பதிவு வசதி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றார்.


Next Story