கென்யாவில் வெள்ளம்: 40 டன் மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா


கென்யாவில் வெள்ளம்: 40 டன் மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா
x

கென்யாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 277 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் இதுவரை 277 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு இந்தியா நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்துள்ளது. அதன்படி, கென்யாவுக்கு 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்ய நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த இக்கட்டான தருணத்தில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டணி துணைநிற்கிறது

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story