காதல் ஜோடி ஓட்டம்: வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்


காதல் ஜோடி ஓட்டம்: வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்
x

காதல் விவகாரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அரேமல்லாபுரா கிராமத்தை சேர்ந்தவர் அனுமவ்வா (வயது 50). இவரது மகன் மஞ்சுநாத். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். பின்னர் அந்த இளம்பெண்ணுடன் மஞ்சுநாத் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதுபற்றி இளம்பெண்ணின் தந்தை சந்திரப்பாவுக்கு தெரியவந்தது.

உடனே அவர் மற்றும் உறவினர்கள் அனுமவ்வாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர். அத்துடன் மின்கம்பத்தில் அனுமவ்வாவை கட்டி வைத்து சந்திரப்பா உள்பட 3 பேர் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமவ்வா சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அனுமவ்வாவை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இதனை தொடர்ந்து அனுமவ்வாவை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டதன் பேரில், இளம்பெண்ணின் தந்தை உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story