மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மத்திய மந்திரி எல். முருகன் போட்டி


மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மத்திய மந்திரி எல். முருகன் போட்டி
x
தினத்தந்தி 14 Feb 2024 5:22 AM GMT (Updated: 14 Feb 2024 6:12 AM GMT)

ஒடிசாவில் இருந்து, மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் போட்டியிடுகிறார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் காலியாக இருக்கின்ற மாநிலங்களவையின் (ராஜ்யசபை) 56 காலி இடங்களுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் நாளையுடன் (15-ந்தேதி) முடிவடைகிறது.

இந்த சூழலில், இந்த தேர்தலுக்கான போட்டியில் பா.ஜ.க. வெளியிட்டு உள்ள பட்டியலில், மத்திய தகவல் தொழில்நுட்ப இணை மந்திரி எல். முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவர், மக்களவை தேர்தலில், நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன்படி, உமேஷ் நாத் மகராஜ், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோரும் மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று, மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், ஒடிசாவில் இருந்து போட்டியிடுகிறார். அவருக்கு ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதாதள கட்சி தனது ஆதரவை வழங்கி உள்ளது. இதற்கு அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் தனது ஒப்புதலை வழங்கி உள்ளார்.

அதுபற்றிய அக்கட்சியின் அறிக்கையில், ரெயில்வே மற்றும் தொலைதொடர்பு வளர்ச்சி துறையின் நலன்களை முன்னிட்டு நாங்கள் இந்த ஆதரவை தெரிவிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story