மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தி நடைபயணம்....!


மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தி நடைபயணம்....!
x

ராகுல் காந்தி பாதயாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டுள்ளார்.

போபால்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை பாதயாத்திரை நடக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக மராட்டிய மாநிலத்தை அடைந்தது.

நேற்று காலை, மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. காங்கிரஸ் தொண்டர்கள் மூவர்ண கொடியை ஏந்தியபடி நடந்து சென்றனர். அவர்கள் இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்குள் நுழைந்தனர்.

மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது. அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ராவும் யாத்திரையில் இணைந்துள்ளார்.















Next Story