'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பாளர் வழக்கு


தி கேரளா ஸ்டோரி திரைப்பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பாளர் வழக்கு
x

‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

புதுடெல்லி,

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதனையடுத்து பல மாநிலங்களில் இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லியை சேர்ந்த குர்பான் அலி சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இதனை பரிசீலித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்த மனுவை வருகிற 15-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தயாரிப்பாளர் வழக்கு

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு மேற்குவங்காள அரசு தடை விதித்தது.

இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அந்த மனுவில், திரைப்படத்திற்கு மத்திய சான்றளிப்பு வாரியம் சான்றளித்த பிறகு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், திரைப்படத்துக்கான தடையை விதிக்க சட்டம் ஒழுங்கை மாநில அரசு காரணமாக காட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தியேட்டர் உரிமையாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கை காரணமாக, திரைப்படம் திரையிடப்படாமல் மறைமுக தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story