வனவிலங்கு-மனித மோதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்


வனவிலங்கு-மனித மோதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:47 PM GMT)

குடகில் வனவிலங்கு-மனித மோதல்களை தடுக்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடகு-

விவசாயிகள் போராட்டம்

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் நேற்று விவசாய சங்கங்கள் மற்றும் பழங்குடியினர், தொழிலாளர்கள் சார்பில் ஒற்றுமை போராட்டம் நடத்தப்பட்டது. மடிகேரி ஜெனரல் திம்மையா சதுக்கத்தில் கூடிய அவர்கள் வனத்துறை அலுவலகத்தை நோக்கி சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதற்காக அனைவரும் ஒன்றுகூடி மனித சங்கிலி பேரணியாக மடிகேரி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய குடகு விவசாயிகள் சங்கத் தலைவர் சோமையா கூறியதாவது:-

குடகு மாவட்டத்தில் வனவிலங்கு-மனித மோதல் நடைபெறுகிறது. இந்த மோதலால் அடிக்கடி உயிர் பலிகள் ஏற்படுகிறது. மேலும் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த யானைகள் நடமாட்டம் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை வனத்துறை அதிகாரிகள் நேர்மையாக எந்த முயற்சியும் செய்யவில்லை.

நடவடிக்கை எடுக்கவேண்டும்

சோதனை முயற்சிகள் மட்டுமே மேற்கொள்கின்றனர் .இதனால் எந்த பயனும் இல்லை. எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும். இ்ல்லையென்றால் இதைவிட மாபெரும் போராட்டம் நடைபெறும். இதுவரை யானைகள் பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. அந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கவில்லை. மாநில அரசு உடனே இதற்கு நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்றனர்.

மேலும் இது தொடர்பாக வனத்துறை தலைமை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவை பெற்று கொண்ட வனத்துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story