உ.பி.: நீதிபதியாக தேர்ச்சி பெற்ற தெருவோர கடை நடத்துபவரின் மகன்; நண்பர்கள் வாழ்த்து


உ.பி.: நீதிபதியாக தேர்ச்சி பெற்ற தெருவோர கடை நடத்துபவரின் மகன்; நண்பர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 12 Sep 2023 1:20 PM GMT (Updated: 12 Sep 2023 1:45 PM GMT)

உத்தர பிரதேசத்தில் தெருவோர கடை நடத்துபவரின் மகன் நன்றாக படித்து, நீதிபதி ஆனதற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் வசித்து வருபவர் முகமது காசிம். இவரது தந்தை உத்தர பிரதேசத்தின் வடமேற்கே சம்பல் பகுதியில் தெருவோரத்தில் கடை போட்டு உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நீதிபதிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொண்ட காசிம், அதில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 135-வது ரேங்க் பெற்று நீதிபதியாகியுள்ளார்.

அவர் நீதிபதியானதற்காக அவருடைய நண்பர்கள் பலர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில், நீதி துறையில் முன்பே பதவியில் உள்ள சிலர், காசிமை வரவேற்கும் வகையில் சமூக ஊடக பதிவை வெளியிட்டு உள்ளனர்.

இதுபற்றி வழக்கறிஞராக உள்ள ரப்பானி என்பவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், முகமது காசிம் பாய்க்கு வாழ்த்துகள். எனக்கு மூத்தவர், வழிகாட்டி மற்றும் ஒரு நண்பராக உள்ள காசிம் பாய், உத்தர பிரதேச சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாகி உள்ளார். உங்களுடைய கடின உழைப்பு பலன் அளித்துள்ளது.

உங்களது சாதனைக்காக நான் உண்மையில் பெருமைப்படுகிறேன். உங்களுடைய புதிய பதவியில் அனைத்து நலன்களும் கிடைக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

காசிம், அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தில் சேர்ந்து இளநிலை சட்ட படிப்பும், பின்னர் டெல்லி பல்கலை கழகத்தில் முதுநிலை சட்ட படிப்பும் படித்துள்ளார்.


Next Story