விராரில் பள்ளி பஸ்சில் பயங்கர தீ - 5 குழந்தைகள் மயிரிழையில் உயிர் தப்பினர்
விராரில் பள்ளிக்கூட பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த 5 குழந்தைகள் மயிரிழையில் உயிர் தப்பினர்.
வசாய்,
விராரில் பள்ளிக்கூட பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த 5 குழந்தைகள் மயிரிழையில் உயிர் தப்பினர்.
5 குழந்தைகள் மீட்பு
பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் நேற்று காலை 6.45 மணி அளவில் பள்ளி பஸ் ஒன்று 5 குழந்தைகளுடன் சென்று கொண்டு இருந்தது. அங்குள்ள கல்லூரி அருகே சென்றபோது பஸ்சின் முன்பகுதி திடீரென கரும்புகையுடன் பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். டிரைவர் மற்றும் உதவியாளர் சேர்ந்து பஸ்சில் இருந்த 5 மாணவர்களையும் உடனடியாக வெளியேற்றினர்.
பஸ் எரிந்து நாசம்
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களுடன் வந்தனர். அதற்குள் தீ பரவி பஸ் கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. டிரைவர் மற்றும் உதவியாளர் துரிதமாக செயல்பட்டதால் பள்ளிக்குழந்தைகள் 5 பேரும் மயிரிழையில் உயிர் தப்பினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.