ரூ.1,000 கோடி மதிப்பில் வடசென்னைப் பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்


ரூ.1,000 கோடி மதிப்பில் வடசென்னைப் பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
x

வடசென்னை பகுதிகள் வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, சென்னை, அண்ணாநகர் மேற்கு, 100 அடி பிரதான சாலையில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாகவும், சென்னை, ஷெனாய் நகரில், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை, ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ. நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகளை ரூ.5 கோடி மதிப்பீட்டில் அழகுப்படுத்துவது தொடர்பாகவும் அந்தந்த இடங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

2023-24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையிலே 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை மற்றும் கடற்கரையை தூய்மைப்படுத்துகின்ற பணிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த அறிவிப்புகளையும் களத்திற்குச் சென்று ஆய்வு செய்யும் நோக்கில், 14 சட்டமன்ற தொகுதிகளில் 19 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீதமுள்ள 15 இடங்களிலும் வெகுவிரைவில் கள ஆய்வு மேற்கொண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பணிகளை தொடங்கி, வேகமாக முன்னெடுக்கும் செயலில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், 3 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வடசென்னைப் பகுதியை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித்தர சொல்லியிருக்கிறார்.

அந்த வகையில் சென்னைப் பெருநகரத்தினுடைய அளப்பரியாப் பணிக்காக தினந்தோறும் ஒரு பகுதியில் கள ஆய்வு செய்து, அப்பணிகளை ஒருங்கிணைத்து செயலாற்றும் வகையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, இந்த மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தற்போது விளையாட்டுத் துறையில் ஏற்படுத்தி வருகின்ற மாற்றங்கள் விளையாட்டுத் துறைக்காக அமைக்கப்பட இருக்கின்ற கட்டமைப்புகள், அதே போன்று விளையாட்டுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற திட்டங்களுக்காக அனுதினமும் பணியாற்றிக்கொண்டிருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமுயற்சியை மேற்கொண்டிருக்கின்றார்.

இதனுடைய பலன், வருகின்ற காலங்களில் தேசிய அளவிலிலேயே விளையாட்டுத் துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கும் என்கிற சூழ்நிலையை உருவாக்குவதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story