சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 782 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த இலங்கையைச் சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 363 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரின் உடைமைகளை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.

அதில் அவர் துணிகளுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.24 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 495 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இந்த நிலையில் விமான நிலைய பன்னாட்டு வருகை பகுதியில் இருந்த விமான நிலைய ஊழியர் ஒருவர், திடீரென புறப்பாடு பகுதியில் உள்ள கழிவறையில் இருந்து வெளியே செல்ல முயற்சிப்பதை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டனர்.

அந்த ஊழியரை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 300 கிராம் தங்க கட்டியை பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த இலங்கை வாலிபர், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க அவரிடம் கடத்தல் தங்கத்தை கொடுத்து அதனை விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்து தரும்படி கூறியது தெரிந்தது.

இதேபோல் பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை பகுதியில் இருந்த தனியார் விமான நிறுவன ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் அவரை சோதனை செய்தனர்.

அதில் அவர் அணிந்திருந்த பேண்ட் பின்புற பையில் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் ரூ.31 லட்சம் மதிப்புள்ள 624 கிராம் தங்கம் இருந்தது.

குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கையின் அடியில் ஆந்திர வாலிபர் வைத்து விட்டு சென்ற அந்த தங்கத்தை அதிகாரிகளிடம் சிக்காமல் வெளியே வந்து தன்னிடம் கொடுக்குமாறு கூறியதால் எடுத்து செல்ல முயன்றது தெரிந்தது. தங்கத்துடன் பிடிபட்ட விமான நிறுவன ஊழியரை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிறுவன ஊழியரை கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 782 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தங்கம் கடத்தல் ஆசாமிக்கு உதவிய விமான நிறுவன ஊழியர்கள் 2 பேர் உள்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story