மரத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி; 4 பேர் படுகாயம்


சிவகாசி அருகே மரத்தில் கார் மோதி2 பெண்கள் இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி அருகே மரத்தில் கார் மோதி2 பெண்கள் இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஓடைக்குள் புகுந்த கார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் கிராமம் நாகமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 40). இவர் மஞ்சள் பை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுகன்யா(35), மகன்கள் நவநீப்(6), ஜெகதீஷ் (5), உறவினர் மகேஸ்வரி(41), பொன்ராஜ் மனைவி சீதாலட்சுமி(63) ஆகிய 6 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று முன்தினம் கொங்கலாபுரத்திற்கு காரில் திரும்ப வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் தனியார் என்ஜினீயர் கல்லூரி அருகே வந்தபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் புகுந்து அங்குள்ள பனைமரத்தின் மீது மோதி நின்றது.

2 பெண்கள் பலி

இந்த விபத்தில் சுகன்யா, சீதாலட்சுமி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சுகன்யாவை பரிசோதித்த செய்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி சீதாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். சரவணகுமார் உள்பட 4 பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கொங்கலாபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா சென்று திரும்பிய போது 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Related Tags :
Next Story