பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட் 27–ந் தேதி செலுத்தப்படுகிறது


பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட் 27–ந் தேதி செலுத்தப்படுகிறது
x
தினத்தந்தி 1 Jan 2017 11:45 PM GMT (Updated: 1 Jan 2017 5:58 PM GMT)

பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட்டில் 103 செயற்கைகோள்களை பொருத்தி இஸ்ரோ வருகிற 27–ந் தேதி விண்ணில் செலுத்துகிறது. இதன் மூலம் உலக சாதனை படைக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

சென்னை,

பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட்டில் 103 செயற்கைகோள்களை பொருத்தி இஸ்ரோ வருகிற 27–ந் தேதி விண்ணில் செலுத்துகிறது. இதன் மூலம் உலக சாதனை படைக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

இஸ்ரோ


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்த ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.

இதில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்களை இஸ்ரோவின் வணிகக் கிளையான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறுவனம் மூலம் பெற்று, அதற்குரிய கட்டணத்தை அந்தந்த நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

குறிப்பாக கடந்த 1994–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை இஸ்ரோ பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் 121 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறது. இதில் 21 நாடுகளைச் சேர்ந்த 51 நிறுவனங்களுக்கு சொந்தமான 79 வெளிநாட்டு செயற்கைகோள்களும், உள்நாட்டைச் சேர்ந்த 42 செயற்கைகோள்களும் ஆகும். இவற்றை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது.

நானோ செயற்கைகோள்கள்


இதைத் தொடர்ந்து தற்போது 103 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்தி விண்ணில் நிலை நிறுத்துவதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். வெவ்வேறு நாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருக்கிறது.

நானோ வகை செயற்கைகோள்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோள்கள் ஆய்வு செய்யப்பட்டு ராக்கெட்டுகளில் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உலக சாதனை


இதுகுறித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் பி.குன்னில் கிருஷ்ணன் கூறியதாவது:–

இஸ்ரோவை பொறுத்தவரை விண்ணில் செலுத்தப்படும் ஒவ்வொரு ராக்கெட்டுகளும் மிகவும் முக்கியமானது. அந்தவகையில் பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட், வருகிற 27–ந் தேதி (வெள்ளிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள் பெரும்பாலும் ‘நானோ’ வகை செயற்கைகோள்களாகும்.

அனைத்து செயற்கைகோள்களும் ஒரே சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் சவாலை சந்திக்க வேண்டி உள்ளது. இதற்கு பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல் வகை ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. ராக்கெட்டின் என்ஜினை நிறுத்திவிட்டு, மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் இருக்காது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இருப்பது முதன் முறையாகும். இதை வெற்றிகரமாக நிகழ்த்தினால் இதுபோல உலக சாதனையை படைத்த பெருமையை இஸ்ரோ பெரும்.

4 ராக்கெட்டுகள்


இந்த ஆண்டு ஏவப்படும் முதல் ராக்கெட் இதுவாகும். இந்த ராக்கெட்டில், வானிலையை துல்லியமாக கணித்து கூறும் கார்ட்டோ சாட்–2டி உள்ளிட்ட 103 செயற்கைகோள்களை பொருத்தும் பணி நடந்து வருகிறது. மற்ற அனைத்து செயற்கைகோள்களும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிக ரீதியிலானவை.

வருகிற 27–ந் தேதி ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட்டுடன் சேர்த்து நடப்பாண்டின் முதல் காலாண்டில் 4 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக 3.2 டன் எடைகொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் ஜி–சாட். 19–இ செயற்கைகோளை தாங்கி செல்ல உள்ளது. தொடர்ந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்–1 ராக்கெட்டும், வருகிற மார்ச் மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட்டும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story