சென்னையில் விதிமீறல் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட நடவடிக்கை தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னையில் விதிமீறல் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட நடவடிக்கை தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 May 2017 7:47 PM GMT (Updated: 31 May 2017 7:47 PM GMT)

சென்னையில் விதிமீறல் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

சென்னை சில்க்ஸ் துணிக்கடை தீ விபத்தை படிப்பினையாக எடுத்துக்கொண்டு, சென்னையில் விதிமீறல் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீ விபத்து

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடை கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை பல மணி நேரத்திற்கு மேலாகியும் கட்டுப்படுத்த முடியவில்லை. தீயால் பாதிக்கப்பட்ட கட்டிடம் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள கட்டிடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் 4 தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி 8 தளங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 2007-ம் ஆண்டு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் இடிக்கப்பட்ட தளங்கள் மீண்டும் கட்டப்பட்டன. இவ்வாறு விதிமீறல் தொடர்வதால் தான் விபத்துகளும், சேதங்களும் தடுக்க முடியாதவையாகி வருகின்றன.

விதிமீறல் கட்டிடங்கள்

சென்னையில் ஏராளமான கட்டிடங்கள் இப்படித்தான் எந்த விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்டு இருக்கின்றன. தியாகராயநகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் வணிக நேரத்தின் போது ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும். அந்த அளவுக்கு சென்னை மாநகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள், குறிப்பாக நெரிசலான பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் சென்னை வாழ தகுதியற்ற நகரம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அதுமட்டுமின்றி, சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட 32 ஆயிரம் கட்டிடங்களை இடிக்கப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்திருந்தது.

அரசு நடவடிக்கை

சென்னையில் உள்ள விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவது என்பது ஊழலுக்கு வழிவகுக்கும். மாறாக, அவற்றை இடித்து விட்டு விதிகளுக்குட்பட்டு கட்டுவது தான் சரியானதாக இருக்கும். அப்போது தான் இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படும் போது சேதத்தையும், உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.

எனவே, சென்னை சில்க்ஸ் தீ விபத்தை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு புதிதாக கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story