மதுக்கடை திறந்ததை கண்டித்து போராட்டம் பேச்சு வார்த்தைக்கு அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்


மதுக்கடை திறந்ததை கண்டித்து போராட்டம் பேச்சு வார்த்தைக்கு அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Jun 2017 8:32 PM GMT (Updated: 14 Jun 2017 8:32 PM GMT)

வெங்கலில் மதுபான கடை திறந்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியபோது பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வராததை கண்டித்து, அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்,

வெங்கலில் மதுபான கடை திறந்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியபோது பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வராததை கண்டித்து, அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பெண் அதிகாரியிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுக்கடை திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் அரசு மதுபான கடை கோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டது. இந்த கடைக்கு பதிலாக தாமரைப்பாக்கம்-திருநின்றவூர் நெடுஞ்சாலையில் பூசாலிமேடு பகுதியில் மதுபான கடையை டாஸ்மாக் அதிகாரிகள் திறந்தனர்.

இதை கண்டித்து 2 முறை பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கடையை திறக்கமாட்டோம் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து இந்த போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர்.

இந்த நிலையில் இக்கடைக்கு அருகே மற்றொரு கடையை அதிகாரிகள் கடந்த மாதம் திறந்தனர். இதை கண்டித்து நேற்று மதியம் மீண்டும் 3-வது முறையாக பெண்கள் மதுபானக்கடையை முற்றுகையிட வந்தனர். இதனால் அங்கு இருந்த 2 கடைகளின் விற்பனையாளர்கள் கடையை மூடிவிட்டு சென்றனர்.

பெண்கள் போராட்டம்

பூசாலிமேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள அரசு மதுபான கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மட்டும் அங்கு வந்தனர். ஆனால் வருவாய்த்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அதிகாரிகள் வரும்வரையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி பெண்கள் கடையை முற்றுகையிட்டு அங்கேயே அமர்ந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் பெண்கள் போராடியும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் தரப்பில் யாரும் வரவில்லை. போலீசார் மட்டும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

திடீர் சாலை மறியல்

ஒரு மணி நேரம் போராடியும் பேச்சு வார்த்தை நடத்த எந்த அதிகாரியும் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் தாமரைப்பாக்கம்-திருநின்றவூர் நெடுஞ்சாலையில் பூசாலிமேடு பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த அமணம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சரண்யா வந்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பெண்கள், ‘2 முறை கடையை மூடுவதாக உறுதி கூறி விட்டு இப்படி மீண்டும் கடையை திறந்து எங்கள் கிராம மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளிக்கவில்லையே’ என்று கடுமையாக பேசினர்.

இந்த கடையை நிரந்தரமாக மூட திருவள்ளூர் ஆர்.டி.ஓ. வை சந்தித்து பேசுங்கள் என்று வருவாய் ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் கூறினார். அதற்கு அவர்கள் திங்கட்கிழமை கலெக்டரை சந்தித்து பேசுவதாக கூறினர். ‘அதுவரையில் கடையை திறக்க மாட்டார்கள் அதற்கு நான் உறுதி கூறுகிறேன்’ என்று வருவாய் ஆய்வாளர் கூறினார்.

3½ மணி நேரம் பாதிப்பு

அதைத்தொடர்ந்து பெண்கள் தங்களது சாலை மறியல் போராட்டதை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் நேற்று மதியம் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story