தமிழ்நாட்டில் 10 இடங்களில் ‘அம்மா பெட்ரோல் விற்பனை நிலையங்கள்’ சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு


தமிழ்நாட்டில் 10 இடங்களில் ‘அம்மா பெட்ரோல் விற்பனை நிலையங்கள்’ சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2017 10:00 PM GMT (Updated: 16 Jun 2017 7:46 PM GMT)

இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு உணவுத் துறை அமைச்சர் ரா.காமராஜ் பதிலளித்து பேசினார்.

பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 33 மண்டலங்களில் மொத்தம் 221 எண்ணிக்கையிலான சொந்த கிடங்கு வளாகங்கள் அமைந்துள்ளன.

அவற்றில் பிரதான சாலை அருகில் அமைந்துள்ள சேலம் மாவட்டம் எடப்பாடி, சென்னை மாவட்டம் நந்தனம், தஞ்சாவூர் மாவட்டம் இரும்புத்தலை, திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டை, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் கோயில்பத்து, மதுரை மாவட்டம் கப்பலூர், விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஆகிய 10 இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டு தேவையை கருத்தில் கொண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து ‘அம்மா பெட்ரோல் விற்பனை நிலையங்கள்’ தொடங்கப்படும்.

நெல் உலர்த்தும் களம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நடப்பு நிதி ஆண்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 25 நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் நெல் உலர்த்தும் களம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் நிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 1948-ம் ஆண்டு குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி ரூ.2 ஆயிரத்து 450-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 995 ஆக 1.4.14 முதல் உயர்த்தி வழங்க உள்ளது. இதன் மூலம் 4 ஆயிரத்து 460 பருவகால பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை

அம்மா பெட்ரோல் பங்க் தொடங்குவது பற்றி கேட்டபோது அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

ஏற்கனவே பெட்ரோல் பங்க்குகளை நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தி வருகிறது. அம்மா பெட்ரோல் பங்க் என்பது ஒரு பெருந்திட்டம். இதை இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும்.

உரிய விலையில், அளவில் குறைவு இல்லாமல் எங்கு அதிக தேவை உள்ளதோ அங்கு பெட்ரோல் பங்க்குகளை நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தி வருகிறது. அதுபோலவே அம்மா பெட்ரோல் பங்க்கும் செயல்படும்.

மற்ற பெட்ரோல் பங்க்குகளில் லாபத்துக்கு பெட்ரோல் விற்கப்படுவதால், அம்மா பெட்ரோல் பங்க்குகளில் அதைவிட விலை குறைவாகத்தான் பெட்ரோல் விற்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story