திருவண்ணாமலையில் டி.டி.வி. தினகரன், மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெற்றார்


திருவண்ணாமலையில் டி.டி.வி. தினகரன், மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெற்றார்
x
தினத்தந்தி 11 Aug 2017 12:00 AM GMT (Updated: 10 Aug 2017 7:33 PM GMT)

திருவண்ணாலையில் மூக்குப்பொடி சித்தரிடம், அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆசி பெற்றார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாலையில் மூக்குப்பொடி சித்தரிடம், அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆசி பெற்றார். தொடர்ந்து மலையை சுற்றி காரில் கிரிவலமும் சென்றார்.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக்காட்ட போராடி வருகிறார். பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் எப்போதுமே பிரச்சினைகள் ஏற்படும் நேரங்களில் சாமியார்களை சந்திப்பது உண்டு. அந்த வகையில் டி.டி.வி.தினகரன் தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்காக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மூக்குப்பொடி சித்தரை நேற்று திடீரென சந்தித்தார்.

திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர், பச்சை நிறத்தில் பெரிய சால்வையை போர்த்திக் கொண்டு மவுனமாகவே அமர்ந்திருப்பார். அவர், வெள்ளை தாடி, மீசையுடன் இருப்பார். மூக்குப்பொடி சித்தருக்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் உண்டு.

அவரை தரிசிக்க செல்வந்தர்கள் மூக்குப்பொடியை வாங்கிக் கொண்டு அவர் அருகில் வைத்துவிட்டு நீண்ட நேரமாக காத்திருந்து ஆசி பெறுவார்கள். எப்போதும் குனிந்த தலையுடனேயே இருக்கும் மூக்குப்பொடி சித்தர் நம்மை நிமிர்ந்து பார்த்துவிட்டால் யோகம் அடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அந்த வகையில் தினகரன் நேற்று மூக்குப்பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றார். திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆகாஸ் ஓட்டலில் சித்தர் கீழ்தளத்தில் ஓரமாக அமர்வது வழக்கம். அவரை தினகரன் நேரில் சென்று கையெடுத்து கும்பிட்டார். பின்னர் அவர் முன்னால் சற்று தூரத்தில் அமர்ந்து ஆசி பெற்றார். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அங்கிருந்த தினகரன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இதையடுத்து அவர் காரில் அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் வந்தார். பின்னர் காரில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டு சென்றார்.

திருவண்ணாமலைக்கு டி.டி.வி. தினகரன் திடீரென வந்து சென்றது அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story