தமிழ்நாட்டில் 6 மாதத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை - மத்திய மந்திரி அஸ்வினிகுமார்
![தமிழ்நாட்டில் 6 மாதத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை - மத்திய மந்திரி அஸ்வினிகுமார் தமிழ்நாட்டில் 6 மாதத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை - மத்திய மந்திரி அஸ்வினிகுமார்](https://img.dailythanthi.com/Images/Article/201710151312324240_Centre-Will-take-steps-to-build-AIIMS-in-Tamil-Nadu_SECVPF.gif)
தமிழ்நாட்டில் 6 மாதத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி அஸ்வினி குமார் கூறிஉள்ளார்.
சென்னை,
பிரதமர் நரேந்திர மோடியை துணை–முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய மருத்துவ குழுவை அனுப்புமாறு கோரிக்கைவைத்தார்.
இதையடுத்து மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னை, சேலம் உள்பட டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய குழு புதுச்சேரி சென்று உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபே தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று சென்னை வந்தார். காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் உடன் சென்றனர். பின்னர் மத்திய இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபே நிருபர்களிடம் பேசுகையில், டெங்குவுக்கு இதுவரை 40 பேர் தமிழ்நாட்டில் பலியாகி உள்ளனர். பிற காய்ச்சலுக்கு 30 பேர் இறந்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு மத்திய அரசு எல்லா வகையிலும் தமிழகத்துக்கு உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் 6 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான இடம் 3 மாதத்தில் தேர்வு செய்யப்படும்.
எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்றார்.
Related Tags :
Next Story