பினராயி விஜயனை மிரட்டும் தொனியில் பேசுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்


பினராயி விஜயனை மிரட்டும் தொனியில் பேசுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்
x
தினத்தந்தி 17 Oct 2017 7:56 PM GMT (Updated: 17 Oct 2017 7:56 PM GMT)

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை மிரட்டும் தொனியில் பேசியதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மோடி அரசின் 40 மாத கால ஆட்சி அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. மக்கள் மத்தியில் மோடி அரசுக்கு எதிராகவும், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராகவும் கடும் கோபம் எழுந்துள்ளது. பல்வேறு தேர்தல் முடிவுகள் இதை உணர்த்துகின்றன. குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத்தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பா.ஜ.க. பதற்றம் அடைந்துள்ளது.

மோடி அரசின் மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சித்தாந்த ரீதியாகவும் போராட்ட களத்திலும் எதிர்த்து வருவதால், அவர்களது ஆத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை நோக்கி திரும்பியுள்ளது. கேரளாவில் நடக்கும் வன்முறை செயல்களுக்கு காவி பயங்கரவாதமே காரணம் என்பதை அந்த மாநில மக்கள் தெளிவாக உணர்ந்திருப்பதால், பாதயாத்திரை என்ற பெயரில் அவர்கள் நடத்திய முயற்சி கேரள மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ‘கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரள மாநிலத்தை தாண்டி வேறு எங்கும் கால் வைக்க முடியாது’ என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் மிரட்டும் தொனியில், ‘பினராயி விஜயன் கேரளாவை விட்டு வெளியே போக முடியாது’ என்று கூறியிருக்கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு முதல்-மந்திரியை இவ்வாறு மிரட்டுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.

பொன்.ராதாகிருஷ்ணன், தாம் வகிக்கும் மத்திய மந்திரி பதவிக்கு சற்றும் பொருந்தாத வகையில், இவ்வாறு பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற திருவள்ளுவரின் குறளை 2 பேருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சட்டம்-ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story