மழைநீரை சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை


மழைநீரை சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 31 Oct 2017 7:56 PM GMT (Updated: 31 Oct 2017 7:56 PM GMT)

மழைநீரை சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ‘ஏடிஸ்’ கொசுக்கள் முறையாக மூடி வைக்காத நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது. எனவே, ஒவ்வொருவருக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த பணியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் வாரம் ஒருமுறை தங்கள் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று குணமடையும் வகையில் சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காய்ச்சலுக்கான காரணத்தை 40 வினாடிகளில் தெரிவிக்கக்கூடிய உயர்தர நவீன ரத்த அணுக்களின் அளவீட்டை கணக்கிடும் எந்திரங்கள் போதிய அளவில் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஜெயலலிதா அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது தொடங்கி உள்ள வடகிழக்கு பருவமழை அதிக அளவு பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்தால்தான் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியும். பெய்கின்ற மழைநீரை சேமித்து நிலத்தடி நீரினை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். 

Next Story