முதல்-அமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் புகார் செய்தது எப்படி கட்சித்தாவலாக கருத முடியும்?


முதல்-அமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் புகார் செய்தது எப்படி கட்சித்தாவலாக கருத முடியும்?
x
தினத்தந்தி 20 Nov 2017 10:30 PM GMT (Updated: 20 Nov 2017 8:07 PM GMT)

கவர்னரிடம் புகார் கொடுத்தது எப்படி கட்சித்தாவலாக கருத முடியும்? என்று மூத்த வக்கீல், ஐகோர்ட்டில் கேள்வி எழுப்பி வாதிட்டார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் புகார் கொடுத்தது எப்படி கட்சித்தாவலாக கருத முடியும்? என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான டெல்லி மூத்த வக்கீல், ஐகோர்ட்டில் கேள்வி எழுப்பி வாதிட்டார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த, அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர்.

அதேபோல, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை சட்டசபைக்குள் கொண்டு வந்ததாக தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்டசபை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஐகோர்ட்டில், அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டன.

நம்பிக்கை தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக ஓட்டுபோட்ட துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்பது உள்பட மொத்தம் 7 வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் டெல்லி மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். அவற்றின் விவரம் பின்வருமாறு:-

எந்த விதிகளையும் முறையாக பின்பற்றாமல், இதுபோன்ற வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக, இந்த தகுதி நீக்கம் உத்தரவை சபாநாயகர் பிறப்பித்துள்ளார். அரியானா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில், எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அப்போது அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு முறையாக கால அவகாசம் வழங்கி, அவர்களிடம் விளக்கம் பெற்று, அதன்பின்னரே அவர்களை தகுதிநீக்கம் செய்து அம்மாநிலங்களின் சபாநாயகர்கள் உத்தரவிட்டனர். ஆனால், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்கு முன்பு அவகாசம் வழங்காதது, இயற்கை நீதிக்கு எதிரானது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார் கூறி, அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி கவர்னரிடம் 18 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்தனர். இந்த நடவடிக்கை எப்படி கட்சி தாவலாக கருத முடியும்?. எம்.எல்.ஏ. ஜக்கையன் முதல்-அமைச்சருக்கு எதிராக புகார் அளித்துவிட்டு, பின்னர் அணி மாறிவிட்டார். அதனால், அவரை தகுதிநீக்கம் செய்யவில்லை. அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதல்-அமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் ஓட்டு போட்டனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த 18 பேரும் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, இவர்களை தகுதிநீக்கம் செய்துள்ளனர். எந்த ஒரு கட்சிக்கும் மாறாதபோது, 18 பேரை கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? இவர்கள் உட்கட்சி ஜனநாயகத்தை எவ்வாறு மீறினார்கள் என்பது இதுவரை எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

நேற்று முழுவதும் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதிட்டார். இவரது வாதம் இன்னும் முடிவடையவில்லை. இதையடுத்து இந்த வழக்குகளின் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அன்றும் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி தொடர்ந்து வாதிடவுள்ளார். 

Next Story