கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாட்டம் தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனை


கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாட்டம் தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனை
x
தினத்தந்தி 23 Dec 2017 7:30 PM GMT (Updated: 23 Dec 2017 7:18 PM GMT)

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாட்டம் தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனை

சென்னை,

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனை நடைபெறுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை(திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதலே விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற உள்ளன.

சென்னை அண்ணாசாலையில் உள்ள சி.எஸ்.ஐ. புனித ஜார்ஜஸ் கதீட்ரல் தேவாலயத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு சி.எஸ்.ஐ. சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையில் விசேஷ ஆராதனையும், நாளை காலை 7.30 மணிக்கு பாதிரியார் இமானுவேல் தேவகடாட்சம் தலைமையில் சிறப்பு ஆராதனையும் நடைபெறுகிறது.

சின்னமலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் இன்று இரவு 11.30 மணி, நாளை காலை 6.15, 8, 10, 11.30 மணிக்கு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளன. இந்த பிரார்த்தனைகளை பங்கு தந்தை லாரன்ஸ்ராஜ் அடிகளார், உதவி பங்கு தந்தைகள் திரவியம் அடிகளார், ஸ்டீபன் அடிகளார், ஜோ.அருண் அடிகளார், ஜோ.ஆண்ட்ரூ அடிகளார் ஆகியோர் நடத்துகின்றனர்.

அடையாறில் உள்ள சி.எஸ்.ஐ. ஏசு அன்பர் ஆலயத்தில் நாளை அதிகாலை 4.30, காலை 8 மணிக்கு தமிழிலும், 7 மணிக்கு ஆங்கிலத்திலும் பாதிரியார் எர்னஸ்ட் செல்வத்துரை தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று இரவு 9 மணிக்கு ஆங்கிலத்திலும், 11.15 மணிக்கு தமிழிலும் பிரார்த்தனை நடைபெறுகிறது. அதேபோல், நாளை காலை 6.15, 7.30, 9 மற்றும் பிற்பகல் 12, மாலை 6 மணிக்கு விசேஷ பிரார்த்தனை நடக்கிறது. இந்த பிரார்த்தனைகளை பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர், உதவி பங்கு தந்தைகள் தெலசால், சந்தோஷ் ஆகியோர் நடத்துகின்றனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. அற்புத சீயோன் ஆலயத்தில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு பாதிரியார் சிகாமணி தலைமையில் விசேஷ ஆராதனை நடைபெறுகிறது. இதேபோல், ஒவ்வொரு தேவாலயங்களிலும் இன்றும், நாளையும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஆராதனை முடிந்தவுடன் பாதிரியார்கள், பங்கு தந்தைகள் ஆராதனையில் பங்கு பெற்ற அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

Next Story