ரூ.11,700 கோடி மோசடி விவகாரம்: சென்னையில் 3 நகைக்கடைகளில் சோதனை


ரூ.11,700 கோடி மோசடி விவகாரம்: சென்னையில் 3 நகைக்கடைகளில் சோதனை
x
தினத்தந்தி 17 Feb 2018 10:00 PM GMT (Updated: 17 Feb 2018 9:11 PM GMT)

ரூ.11,700 கோடி மோசடி விவகாரம் தொடர்பாக, சென்னையில் உள்ள 3 நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சென்னை,

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் நடைபெற்ற ரூ.11,700 கோடி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால் மற்றும் வர்த்தக கூட்டாளியும், கீதாஞ்சலி நகைக்கடை குழும அதிகாரியுமான மெகுல் சோக்‌ஷி மீது வங்கி நிர்வாகம் புகார் செய்து உள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

நிரவ் மோடி மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 15-ந்தேதி முதல் சோதனை நடத்தி வருகிறது.

நாடு முழுவதும் கீதாஞ்சலி குழுமத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை நகைக்கடைகளில் சோதனை

இந்த சோதனை நேற்றும் நீடித்தது. நிரவ் மோடியின் வர்த்தக கூட்டாளியும், கீதாஞ்சலி நகைக்கடை குழும அதிகாரியுமான மெகுல் சோக்‌ஷிக்கு சென்னையில் 3 இடங்களில் நகைகடைகள் உள்ளன.

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள 2 இடங்களிலும், தேனாம்பேட்டையில் ஒரு இடத்திலும் இயங்கி வரும் அந்த நகைக்கடைகளில் டெல்லியில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கடைகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருக்க, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நகைக்கடையின் விற்பனை, வங்கி கணக்கு விவரம் போன்ற ஆவணங்களை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். சோதனை முடிவில் அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது..

ரூ.5,674 கோடி சொத்துகள் பறிமுதல்

இந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிரவ் மோடி வழக்கு தொடர்பாக இந்தியா முழுவதும் மேலும் 21 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு தங்கம், வைரம் உள்ளிட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுவரை மொத்தம் ரூ.5,674 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இந்த சோதனை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கோவையில் சோதனை

கீதாஞ்சலி நகைக்கடை குழும இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணன் என்பவர் கோவை வடவள்ளியை அடுத்த கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் இவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். பின்னர் கிருஷ்ணனிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது வடவள்ளியில் உள்ள ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் உடன் அழைத்து சென்றிருந்தனர். தாங்கள் கொண்டு வந்த ஆவணங்களை காண்பித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.

ஆவணங்கள் இல்லை

இதுகுறித்து கீதாஞ்சலி நகைக்கடை குழும இயக்குனர் கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீதாஞ்சலி குழுமத்தில் நான் தனி இயக்குனராக பணியாற்றி வருகிறேன். என்னைப் போன்று தனி இயக்குனர்களாக பணியாற்றும் மேலும் 2 பேர் புனேவில் உள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு முறை எங்களது கூட்டம் மும்பையில் நடைபெறும். அங்கு சென்று வரவு, செலவு விவரங்களை ஆடிட்டரிடம் சமர்ப்பித்து விட்டு வந்து விடுவோம். எங்களுக்கு வேறு வந்த விவரங்களும் தெரியாது. பண பரிவர்த்தனை குறித்தும், ஆவணங்கள் குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர். உரிய பதிலை கூறினேன். வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தினார்கள். ஆனால் என்னிடம் எந்த ஆவணங்களும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story