காய்கறி வண்டியில் சடலம் கொண்டு செல்லப்பட்டது தற்செயலாக நடந்த நிகழ்வு பாதிரியார் விளக்கம்


காய்கறி வண்டியில் சடலம் கொண்டு செல்லப்பட்டது தற்செயலாக நடந்த நிகழ்வு பாதிரியார் விளக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2018 11:09 AM GMT (Updated: 21 Feb 2018 11:09 AM GMT)

காய்கறி வண்டியில் சடலம் கொண்டு செல்லப்பட்டது தற்செயலாக நடந்த நிகழ்வு என தொண்டு நிறுவனத்தின் தாளாளர் பாதிரியார் விளக்கம் அளித்து உள்ளார். #TamilNews

சென்னை

காஞ்சீபுரத்தை அடுத்த திருமுக்கூடல் அருகே உள்ள பாலேஸ்வரம் பகுதியில் ஆதரவற்ற முதியவர்களை பராமரிக்கும் ஒரு தனியார் கிறிஸ்தவ ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் ஆதரவற்ற சில முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.

அந்த ஆசிரமத்திற்கு சொந்தமான வேன் ஒன்று உத்திரமேரூர் அருகே உள்ள எடையார்பாக்கம் காட்டு சாலை வழியாக வந்துகொண்டு இருந்தது. அப்போது அதிலிருந்து ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்ற அலறல் சத்தம் கேட்டது. உடனே அப்பகுதியில் சென்றவர்கள் அந்த வேனை மடக்கிப்பிடித்தனர்.

அந்த வேனில் திண்டுக்கல்லை சேர்ந்த செழியன், திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் என்ற 2 முதியவர்கள் இருந்தனர்.

அந்த 2 பேரும் வேனில் பிணம் ஒன்று இருப்பதாக கூறியதன் பேரில் அந்த வேனை மக்கள் சோதனை செய்தனர். அப்போது வேனில் காய்கறிகளுடன் ஒரு ஆண் பிணமும் இருந்தது. உடனே அவர்கள் அந்த வேனை சாலவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவரை வேனில் ஏற்றிச்சென்றனர். தாம்பரம் அருகே சென்றபோது அவர் இறந்துவிட்டார். எனவே அவரது உடலை ஆசிரமத்துக்கு கொண்டுசென்று அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக அந்த வேனில் காய்கறிகளுடன் சேர்த்து அந்த உடலையும் கொண்டுசென்றதாக டிரைவர் கூறினார்.

சாலவாக்கம் போலீசார் வேன் டிரைவர் ராஜேஷ் (வயது 22) என்பவரை கைது செய்தனர். வேனில் வந்த 2 முதியவர்களையும் மீட்டனர். அவர்கள் வேனில் பிணம் இருந்ததால் பயத்தில் அலறியதாக கூறினர்.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று இந்த தொண்டு நிறுவனத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தில் ஆய்வு செய்து முழுவிவரம் அளிக்கப்படும் என  அதிகாரிகள் கூறினார்.

தொண்டு நிறுவனத்தின் தாளாளர் பாதிரியார் கூறியதாவது:-

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்றோர், முதியோர்களுக்காக தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  காய்கறி வண்டியில் சடலம் கொண்டு செல்லப்பட்டது தற்செயலாக நடந்த நிகழ்வு. 

பொருளாதார சிக்கலால் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான வண்டியில், காய்கறி மூட்டைகள், முதியவர்கள்  ஏற்றிவரப்பட்டனர் என பாதிரியார்  கூறினார்.

Next Story