தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களைஅரசு மருத்துவ கல்லூரியில் ஒரு வாரத்துக்குள் சேர்க்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களைஅரசு மருத்துவ கல்லூரியில் ஒரு வாரத்துக்குள் சேர்க்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Feb 2018 9:30 PM GMT (Updated: 24 Feb 2018 7:10 PM GMT)

தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு வாரத்துக்குள் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு வாரத்துக்குள் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வந்த அன்னை மருத்துவ கல்லூரியை தொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு படித்து வந்த 144 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதைத்தொடர்ந்து அந்த மாணவர்கள் தங்களை அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ‘மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான கடிதம் மத்திய அரசுக்கு வந்துள்ளது. இதில் உரிய முடிவு எடுக்க கால அவகாசம் தேவை’ என்று மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு உரிய முடிவு எடுக்க ஐகோர்ட்டு ஒரு வார கால அவகாசம் வழங்கியது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரபு மனோகர், பாதிக்கப்பட்ட 144 மாணவர்களையும் கவுன்சிலிங் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எச்.ராஜசேகர், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக கவுன்சிலிங் நடத்தி கல்லூரியில் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி, ‘தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் கவுன்சிலிங் நடத்தி பாதிக்கப்பட்ட 144 மாணவர்களையும் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

Next Story