தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு


தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 27 Feb 2018 11:45 PM GMT (Updated: 27 Feb 2018 9:27 PM GMT)

கர்நாடக மாநில தேர்தல் லாபத்துக்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம் என மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் வந்த பிரதமர் காவிரி பற்றிப் பேசாமல் அமைதி காத்ததும்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய காலக்கெடுவிற்குள் அமைப்பது குறித்து உத்தரவாதம் தர இயலாது என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவசரமாக செயல்பட்ட பா.ஜனதா அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் இதுபோன்ற போக்கை கைவிட்டு, 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை நிச்சயம் அமைக்க வேண்டும். கர்நாடக தேர்தல் லாபத்துக்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இரங்கல்

சண்டிகாரில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஊடுகதிர் துறையில் படித்து வந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த தமிழக மாணவர் ஆர்.கிருஷ்ணபிரசாத் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கிருஷ்ணபிரசாத் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 24 வயதே ஆன தன் மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவ மேற்படிப்பிற்கான போட்டித்தேர்வில் வெற்றிபெற்று, பிற மாநிலங்களில் மருத்துவ மேற்படிப்பில் இணையும் தமிழக மாணவர்கள் ரேக்கிங், இன-மொழி பாகுபாடு எதிர்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

அலட்சியம் செய்து வருகிறது

இருந்தாலும், மத்தியில் உள்ள பா.ஜனதா அரசோ அல்லது மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசோ, தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒரு நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த இரு தமிழக மாணவர்கள் மரணத்தையொட்டி, வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநிலத்தில் தனியாக ஒரு கண்காணிப்புக் குழுவைத் தொடங்க வேண்டும் என்று அறிக்கை வாயிலாகவும், தமிழக சட்டமன்றத்திலும் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடுத்து வைத்தும், அதை அ.தி.மு.க. ஆட்சி காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியம் செய்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

விசாரணை ஆணையம்

இதுபோல, உயர்கல்வி பெற வேறு மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக மாணவர்களை இழப்பதற்கு தமிழகம் இனியும் தயாராக இல்லை என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். ஆகவே, தமிழக மாணவர் கிருஷ்ணபிரசாத்திற்கு கொடுக்கப்பட்ட மன, உடல் ரீதியான தொல்லைகள் குறித்து உரியமுறையில் விசாரணை மேற்கொண்டு, அந்த மாணவனின் மரணத்தில் எழும் சந்தேகங்களைப் போக்கும் வகையில், மாநில அரசு உடனடியாக சண்டிகர் அரசுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, மற்ற மாநிலங்களில் தமிழக மாணவர்கள், குறிப்பாக மருத்துவ மேற்படிப்பு படித்து வரும் மாணவர்கள் தங்களுடைய கல்வியைத் தொடர முடியாமல் போவதற்குரிய காரணங்களை ஆராயவும், அவர்களின் திடீர் மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யவும் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முன்வர வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story