மயிலாப்பூர்-ராயப்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்


மயிலாப்பூர்-ராயப்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 23 March 2018 9:30 PM GMT (Updated: 23 March 2018 9:12 PM GMT)

கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி, மயிலாப்பூர்-ராயப்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

சென்னை,

அருள்மிகு கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி திருவிழா 29-ந் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.

திருவிழா நடைபெறும் நாட்களில் கீழ்க்கண்டவாறு கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அதன் விவரம் வருமாறு.

* கச்சேரி சாலையிலிருந்து, மத்தள நாராயணன் தெரு

* சித்ரகுளம் கீழ் தெருவிலிருந்து, சித்ரகுளம் வடக்கு தெரு

* நடுத் தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவிலிருந்து, கிழக்கு மாட தெரு

* ஆர்.கே. மடம் சாலையிலிருந்து, தெற்கு மாட தெரு

* புனிதமேரி சாலையிலிருந்து, ஆர்.கே. மடம் சாலையில் தெற்கு மாட வீதி நோக்கி

* டாக்டர் ரங்கா சாலையிலிருந்து, வெங்கடேச அக்ரஹாரம் சாலை

* லஸ் சந்திப்பிலிருந்து, ஆர்.கே.மடம் சாலை

கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள் லஸ், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, சி.பி. ராமசாமி ரோடு, ராஜா அண்ணாமலைபுரம் 2-வது பிரதான சாலை, தேவநாதன் தெரு, ஆர்.கே.மடம் ரோடு வழியாக மந்தவெளியை அடையலாம்.

2. அடையாரிலிருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தவெளி, வி.கே.அய்யர் ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் ரோடு, கற்பகாம்மாள் நகர், விவேகானந்தா கல்லூரி, பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் பகுதியை அடையலாம்.

3. மயிலாப்பூர் கோவில் குளம் அருகில் உள்ள மாநகர பேருந்து நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

4. 24-ந்தேதி அதிகாரநந்தி திருவிழா அன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், 28-ந்தேதி தேர்திருவிழா அன்று காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் 29-ந்தேதி அறுபத்து மூவர் திருவிழா அன்று பிற்பகல் 2 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

28-ந்தேதி தேர்திருவிழா அன்றும், 29-ந்தேதி அறுபத்து மூவர் திருவிழா அன்றும் சன்னதி தெரு, கிழக்கு மாட வீதி, தெற்கு மாடவீதி ராமகிருஷ்ணாமடம் சாலை மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை.

அந்த நாட்களில் கீழ்க்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. கிழக்கு புறம் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் சாலையில் உள்ள காமதேனு கல்யாண மண்டபத்திற்குள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

2. மேற்கிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம் திருமயிலை பறக்கும் ரெயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

3. காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் பி.எஸ். சிவசாமி கலாலயா பள்ளி மற்றும் ஆர்.ஆர். சபா அருகில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story