தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு, போராட்டம் தீவிரம்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு, போராட்டம் தீவிரம்
x
தினத்தந்தி 25 March 2018 10:32 AM GMT (Updated: 25 March 2018 10:32 AM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. #SterliteProtest

தூத்துக்குடி, 

 தூத்துக்குடி–மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

அதன்படி நேற்று வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாநகரில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. தியேட்டர்கள் மூடப்பட்டன. நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. பிரதான சாலைகள் மட்டுமல்லாது சிறிய தெருக்களில் உள்ள கடைகள்கூட மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் ஓடவில்லை. சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகே ஆலைக்கு எதிராக திரளான பொதுமக்கள் கூடி போராட்டம் நடத்தினர்.

 தூத்துக்குடி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிற பகுதிகளிலும் போராட்டம் தொடங்கி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் இன்று நடைபெற்று வரும் போராட்டத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு அழைத்தால் வருவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.” என கமல்ஹாசன் கூறிஉள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கந்தக டை ஆக்சைடால் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதால் அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் ராமதாஸ்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைமூட வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு உலக தமிழர்கள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி லண்டனில் அதன் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டு முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் குழந்தைகளும் கலந்து கொண்டனர். . மனித உரிமை ஆர்வலர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்த எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதுடன் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர். போராட்டம் தீவிரம் அடையும் எனவும் பொதுமக்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story