அலுமினிய ரெயில் பெட்டிகள் தயாரிக்க திட்டம் ஐ.சி.எப். பொதுமேலாளர் தகவல்


அலுமினிய ரெயில் பெட்டிகள் தயாரிக்க திட்டம் ஐ.சி.எப். பொதுமேலாளர் தகவல்
x
தினத்தந்தி 31 March 2018 10:45 PM GMT (Updated: 31 March 2018 7:09 PM GMT)

ஐரோப்பா, ஜப்பான் நாட்டு கம்பெனிகளுடன் இணைந்து அலுமினிய ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் என்று ஐ.சி.எப். பொதுமேலாளர் எஸ்.மணி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ஐரோப்பா, ஜப்பான் நாட்டு கம்பெனிகளுடன் இணைந்து அலுமினிய ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் என்று ஐ.சி.எப். பொதுமேலாளர் எஸ்.மணி தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஜெர்மன் தொழில்நுட்பத்தில் எல்.எச்.பி. (இலகு ரக) ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஐ.சி.எப். தொழிற்சாலையில் 2017-18-ம் நிதி ஆண்டில் 2,464 ரெயில் பெட்டிகள் தயாரிப்பதற்கு ரெயில்வே வாரியம் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் பணியாளர்களின் திறன், நிர்வாக திறன் ஆகியவற்றால் இலக்கையும் தாண்டி அதாவது 2,503 ரெயில் பெட்டிகள் உற்பத்தி செய்து ஐ.சி.எப். சாதனை படைத்துள்ளது.

இதில் 70 சதவீத பெட்டிகள் துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் பெட்டிகள் மும்பை, சென்னை, காஷ்மீர், கொல்கத்தா மெட்ரோ, ராணுவம், இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் 2,277 ரெயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

2017-18-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 2,500-வது எல்.எச்.பி. பெட்டி ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து தென் கிழக்கு ரெயில்வேக்கு நேற்று வழியனுப்பி வைக்கப்பட்டது. ஐ.சி.எப். தொழிற்சாலையை சேர்ந்த மூத்த ஊழியர்களான சி.பக்தவச்சலம் மற்றும் வி.ராஜகோபால் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். ஐ.சி.எப். பொதுமேலாளர் எஸ்.மணி, ரெயில்வே வாரிய ஓய்வுப்பெற்ற நிதி கமிஷனர் ராஜலட்சுமி ரவிக்குமார், ஓய்வுப்பெற்ற மெக்கானிக்கல் உறுப்பினர் சம்பத் தசரதி, ஓய்வுப்பெற்ற கூடுதல் உறுப்பினர் ஆர்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென் கிழக்கு ரெயில்வேக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2,500-வது பெட்டி சாய்வு இருக்கை வசதிக்கொண்டது. இதனை 160 கி.மீ. வேகத்தில் இழுத்துச் செல்லலாம். அதிக பாரம் ஏற்றினாலும் சுமுகமாக செல்லும் வகையில் ‘ஏர் ஸ்பிரிங்’ உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகளும் உள்ளன. கொல்கத்தா மெட்ரோ ரெயிலுக்கான பெட்டிகளும் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விரைவில் அந்த பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து, கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

வழியனுப்பும் நிகழ்ச்சிக்கு பின்னர், ஐ.சி.எப். பொதுமேலாளர் எஸ்.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வருடம் ரெயில் பெட்டி உற்பத்தியில் இலக்கை தாண்டி நாங்கள் சாதனை படைத்துள்ளோம். 2018-19-ம் ஆண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதில் பல்வேறு புது வடிவமைப்பிலான பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும். உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள 80 ரெயில் பெட்டிகள் விரைவில் இலங்கைக்கு அனுப்பப்படும்.

‘ரெயில்-18’ என்ற பெயரில் புல்லட் ரெயில் போன்ற அதிக வேகத்தில் செல்லும் உலக தரத்திலான ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த அலுமினியத்தால் செய்யப்படும் ரெயில் பெட்டி தயாரிக்கும் கம்பெனிகளுடன் இணைந்து செயல்பட உள்ளோம். ‘ரெயில்-20’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, 2020-ம் ஆண்டு அலுமினிய ரெயில் பெட்டிகள் தயாரிக்க உள்ளோம். அலுமினியத்தால் தயாரிக்கப்படும் பெட்டிகள் எடை குறைவாக இருப்பதால், வேகம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story