ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் பெண்கள் அறிவிப்பு


ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் பெண்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 April 2018 5:45 AM GMT (Updated: 6 April 2018 6:59 AM GMT)

2 நாட்களுக்குள் நடவடிக்கை இல்லாவிட்டால் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பெண்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். #Sterliteissue #Sterliteprotest

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் இருந்து ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு கூடுதலாக 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்ய பணிகள் நடந்தன. 

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு நோய் பாதிப்புகள், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுபட்டு இருப்பதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில் ஆலை விரிவாக்கம் செய்ய தூத்துக்குடி பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். 

அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அங்குள்ள மரத்தடியில் குடும்பத்துடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். 

இந்த நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் பரவியது. ஆலையை சுற்றியுள்ள பண்டாரம்பட்டி, வடக்குசங்கரபேரி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர் ஆகிய கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முதல் சில்வர்புரம் கிராம மக்களும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள். அவர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தற்போது 7 கிராமங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இதனிடையே அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் இன்று 54-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் பங்கேற்றனர். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும், உயிரை காவு வாங்கும் நச்சு ஆலை தேவையில்லை என அவர்கள் கண்டன கோஷம் எழுப்பினார்கள். 

இந்த நிலையில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற 2 நாட்கள் அதாவது நாளை மாலை வரை கெடு விதித்துள்ளனர். நாளை மாலைக்குள் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடவேண்டும். இல்லாவிட்டால் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறினர்.

இந்த நிலையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்திற்கு திரண்டு வருமாறு அழைப்பு விடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து முத்துநகர் கடற்கரை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் அந்த கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை பகுதிக்கு யாரேனும் திரண்டு செல்லாமல் கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்திலும் இளைஞர்கள் போராட்டத்திற்கு வருவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story