டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் தொடக்கம் தூத்துக்குடி கலெக்டர் தகவல்


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் தொடக்கம் தூத்துக்குடி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 Sep 2018 10:15 PM GMT (Updated: 24 Sep 2018 8:51 PM GMT)

திருச்செந்தூர் அருகே டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தூத்துக்குடி கலெக்டர் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் 342.22 சதுர மீட்டர் பரப்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் மணி மண்டபம் அமைக்கப்பட உள்ளது.

இதில் 78.41 சதுர மீட்டரில் மணி மண்டபம், 263.81 சதுர மீட்டர் பரப்பில் நூலகம், கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

விரைவில் தொடங்கப்படும்

இதற்கு அரசு நிர்வாக அனுமதி அளித்து உள்ளது. தொடர்ந்து டெண்டர் கோரப்பட்டு உள்ளது. விரைவில் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்ட இசைமேதை நல்லப்பசுவாமிகள் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. முதல்-அமைச்சர் உத்தரவின்படி அவருடைய பிறந்த ஊரான விளாத்திகுளத்தில் ரூ.20 லட்சம் செலவில் நினைவுத்தூண் அமைக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story