கணவர் அளித்த ஆட்கொணர்வு மனு: ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை பெண்ணிடம் நீதிபதிகள் விசாரணை


கணவர் அளித்த ஆட்கொணர்வு மனு: ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை பெண்ணிடம் நீதிபதிகள் விசாரணை
x
தினத்தந்தி 25 Sep 2018 10:52 PM GMT (Updated: 25 Sep 2018 10:52 PM GMT)

கணவர் அளித்த ஆட்கொணர்வு மனு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை பெண்ணிடம் நீதிபதிகள் அதிரடி விசாரணை நடத்தினர்.

மதுரை,

சென்னை வேளச்சேரியை சேர்ந்த விஜய் ராஜேஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:-

எனக்கு யாழினி (வயது 30) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். எனது மனைவி யாழினி சென்னை சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ரத்தீஸ் என்பவரும் படித்துவந்தார். அவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் எனது மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது.

இந்தநிலையில் சமீபத்தில் எனது மனைவி வீட்டைவிட்டு செல்கிறேன் என்று வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி போலீசார் எனது மாமனார், மாமியாரிடம் விசாரித்ததற்கு யாழினி கோபித்துக்கொண்டு செல்லவில்லை என்று கூறியுள்ளனர். யாழினி தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு குழந்தைகளுடன் சென்று அவருடைய பெற்றோருடன் வசித்தார்.

இதற்கிடையே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபாலின் மகன் ரத்தீஸ், எனது மனைவியிடம் தவறான கருத்துகளை கூறி அவரது மனதை மாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ரத்தீஸ், அவரது நண்பர் சுனில் என்பவருடன் சேர்ந்து எனது மனைவியை கடத்தி கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

இதுபற்றி தெரிந்தவுடன் தஞ்சாவூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 18-ந் தேதி புகார் செய்தேன். போலீசார் வழக்குபதிவு செய்தனர். அந்த வழக் கின் அடிப்படையில் எனது மனைவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது யாழினியை நீதிபதிகள் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரிடமும், அவரது கணவர் விஜய் ராஜேஷ்குமாரிடமும் நீதிபதிகள் தனி அறையில் வைத்து அதிரடி விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால் மகன் ரத்தீசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story