கருணாஸ் எம்.எல்.ஏவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் அனுமதி மறுப்பு


கருணாஸ் எம்.எல்.ஏவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 26 Sep 2018 10:18 AM GMT (Updated: 26 Sep 2018 10:18 AM GMT)

கருணாஸ் எம்.எல்.ஏவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் அனுமதி மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

 சென்னை,

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., கடந்த 16-ந் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாகவும், சென்னை தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன் தனது காக்கிச்சட்டையை கழற்றி விட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விடுத்தும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கருணாஸ் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் கருணாஸ் எம்.எல்.ஏ., ஜாமீன் கோரி எழும்பூர் 14-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதேவேளையில், கருணாசை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று, நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி எழும்பூர் 14-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கருணாசிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. நடிகர் கருணாசை போலீஸ் காவலில் எடுக்கும் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதன்படி கருணாஸ் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.கருணாஸ் தரப்பிலும் ஜாமீன் வழங்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 கருணாசை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற மனுவை விசாரித்த நீதிபதி கருணாஸ் எம்.எல்.ஏவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் அனுமதி மறுத்து போலீஸ் மனுவை தள்ளுபடி செய்தார்.

கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story