எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா: எம்.ஜி.ஆருடன் திரைத்துறையில் பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா: எம்.ஜி.ஆருடன் திரைத்துறையில் பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்
x
தினத்தந்தி 28 Sep 2018 10:33 PM GMT (Updated: 28 Sep 2018 10:33 PM GMT)

சென்னையில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில், எம்.ஜி.ஆருடன் திரைத்துறையில் பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

சென்னை, 

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிடப்பட்டு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி இதுவரை 31 மாவட்டங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்ற ஒவ்வொரு மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கிவைத்தும், பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை மக்கள் நலன் கருதி அறிவிக்கப்பட்டன.

அதனடிப்படையில், இதுவரை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்ற 31 மாவட்டங்களில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் ரூ.5,140.18 கோடி மதிப்பில் 2,357 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், ரூ.5,747.24 கோடி மதிப்பில் 3,214 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.5,464.79 கோடி மதிப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 392 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பித்ததோடு அந்தந்த மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 547 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 30-9-2018 அன்று (நாளை) மாலை 3.30 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில், எம்.ஜி.ஆரின் உருவப் படத்தினை திறந்து வைத்தும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட்டும், எம்.ஜி.ஆருடன் திரைத் துறையில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வசனகர்த்தா, உரையாடல் ஆசிரியர்கள், நடனக் கலைஞர்கள், படத் தொகுப்பாளர்கள், சண்டைப் பயிற்சியாளர், ஒப்பனைக் கலைஞர், புகைப்படக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரை கவுரவித்தும், எம்.ஜி.ஆர். சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் மற்றும் எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டும், தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவித்து, காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாப் பேருரையாற்றுகிறார்.

புகைப்பட கண்காட்சி

மேலும், இவ்விழாவுக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை வகிக்கிறார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவர் பா.வளர்மதி ஆகியோர் முன்னிலைவகிக்கிறார்கள். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுகிறார்.

இவ்விழாவையொட்டி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் மக்களுக்கு ஆற்றிய சமூகத் தொண்டு, சீர்திருத்தங்கள், மக்கள் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சியும் தமிழ்நாடு அரசின் சாதனை கள், திட்டங்கள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் 31 அரசு துறைகள் பங்கேற்கும் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை எம்.ஜி.ஆர். புகழ் பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும். இவ்விழாவில் அமைச்சர்கள், துணை சபாநாயகர், அரசு தலைமை கொறடா, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றவுள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசுச் செயலாளர் இரா.வெங்கடேசன் நன்றியுரை ஆற்றுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story