நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி ரூ.1 கோடி கொள்ளை சென்னையில் இருந்து காரில் பின்தொடர்ந்து சென்ற கும்பல் கைவரிசை


நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி ரூ.1 கோடி கொள்ளை சென்னையில் இருந்து காரில் பின்தொடர்ந்து சென்ற கும்பல் கைவரிசை
x
தினத்தந்தி 27 Oct 2018 10:42 PM GMT (Updated: 27 Oct 2018 10:42 PM GMT)

சென்னை நிதி நிறுவனத்தின் திருச்சி கிளை அலுவலக ஊழியர்களை தாக்கி ரூ.1 கோடியை காரில் வந்த மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.

திருச்சி,

சென்னை பாரிமுனையில் ஏ.வி.எம். என்ற பெயரில் நிதி நிறுவனம் உள்ளது. இதன் கிளை அலுவலகம் திருச்சி பாலக்கரை மெயின்ரோட்டில் உள்ளது. இந்த அலுவலகத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த சுந்தரேசன்(வயது 55), மதியழகன் (50) ஆகியோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து ரூ.1 கோடியை தலா ரூ.50 லட்சம் வீதம் இரண்டு பேக்குகளில் வைத்து கொண்டு திருச்சிக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் சென்னை தாம்பரத்தில் ஆம்னி பஸ்சில் ஏறி திருச்சிக்கு வந்தனர்.

அந்த பஸ் நேற்று அதிகாலை 5.20 மணிக்கு திருச்சி தலைமை தபால்நிலையம் வந்தது. அப்போது நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி பாலக்கரையில் உள்ள கிளை அலுவலகத்துக்கு நடந்து சென்றனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வெள்ளை நிற கார் ஒன்று வந்தது. காரில் டிரைவர் உள்பட 5 பேர் அமர்ந்து இருந்தனர். அவர்கள் திடீரென காரில் இருந்து கீழே இறங்கி நிதி நிறுவன ஊழியர்களான சுந்தரேசன், மதியழகன் ஆகியோரை கையால் தாக்கினர்.

ரூ.1 கோடி கொள்ளை

பின்னர் அவர்கள் வைத்து இருந்த ரூ.1 கோடி உள்ள 2 பேக்குகளையும் பறித்து கொண்டு காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஊழியர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளை கும்பல் வந்த காரின் வாகன பதிவு எண் பதிவாகி இருந்தது.

பின் தொடர்ந்தனர்

அந்த எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது போலியான வாகன பதிவு எண் என்பதும், மோட்டார் சைக்கிள் ஒன்றின் பதிவு எண்ணை காரில் வைத்து பொருத்தி இருந்ததும் தெரியவந்தது.

இதனால் இந்த கும்பல் பணம் கொண்டு செல்வதை முன்கூட்டியே அறிந்து சென்னையில் இருந்து நிதி நிறுவன ஊழியர்கள் சென்ற ஆம்னி பஸ்சை பின்தொடர்ந்து காரில் வந்து கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story