சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 7 Nov 2018 7:45 PM GMT (Updated: 7 Nov 2018 5:28 PM GMT)

சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த காட்சிகளை அரசியல் நோக்கத்துக்காக படத்தில் சேர்த்துள்ளனர். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு நல்லது அல்ல.

மத்திய அரசின் திரைப்பட தணிக்கை துறையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர். அவர்கள்தான் திரைப்படங்களை பார்த்து சான்றிதழ் வழங்குகின்றனர். எனவே இதற்கும், மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எனவே சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்–அமைச்சரிடம் கலந்து பேசி, ஆலோசனை நடத்துவோம். அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று படத்தயாரிப்பு நிறுவனத்திடம் அறிவுறுத்துவோம்.

அந்த காட்சிகளை அவர்களாக நீக்கவில்லையெனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவோம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Next Story