‘இந்து’ என்.ராமுக்கு ராஜாராம் மோகன் ராய் விருது இந்திய பத்திரிகை கவுன்சில் வழங்குகிறது


‘இந்து’ என்.ராமுக்கு ராஜாராம் மோகன் ராய் விருது இந்திய பத்திரிகை கவுன்சில் வழங்குகிறது
x
தினத்தந்தி 8 Nov 2018 10:00 PM GMT (Updated: 8 Nov 2018 9:13 PM GMT)

இதழியலில் சிறந்து பங்காற்றி வரும் ‘இந்து’ என்.ராமுக்கு ராஜாராம் மோகன் ராய் விருதினை இந்திய பத்திரிகை கவுன்சில் வழங்க இருக்கிறது.

சென்னை, 

தேசிய அளவில் இதழியல் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பல்வேறு விருதுகளை இந்திய பத்திரிகை கவுன்சில் வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய பத்திரிகை கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

‘இந்து’ என்.ராம் தேர்வு

இந்த ஆண்டுக்கான ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு மூத்த பத்திரிகையாளரும், ‘இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவருமான என்.ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதழியலில் சிறந்து பங்காற்றி வருவதற்காக அவர் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். நவம்பர் 16-ந்தேதி தேசிய பத்திரிகை தினத்தன்று இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

மேலும், கிராம இதழியல் பிரிவுக் கான விருதினை போபால் ‘தேஷ்பந்து’ தலைமை நிருபர் ரூபி சர்க்கார், ரத்னகிரி ‘டெய்லி புதரி’யின் ராஜேஷ் பரசுராம் ஜோஷ்தே ஆகியோர் இணைந்து பெறுகிறார்கள்.

‘டெவலப்மென்ட்டல் ரிப்போர்ட்டிங்’ பிரிவில், கேரள கவுமுதியின் துணை ஆசிரியர் வி.எஸ்.ராஜேஷுக்கும், புகைப்பட இதழியல் பிரிவில், டெல்லியின் ராஷ்டிரிய சகாராவைச் சேர்ந்த சுபாஷ் பாலுக்கும், டெல்லியில் உள்ள பஞ்சாப் கேசரியின் புகைப்பட இதழியலாளர் மிஹிர் சிங்குக்கும் விருதுகள் வழங்கப் படுகிறது.

பத்திரிகை வரைகலை

சிறந்த பத்திரிகை வரைகலை, கார்ட்டூன் பிரிவில் ஐதராபாத்தின் நவ தெலுங்கானா பத்திரிகை கார்ட்டூன் ஆசிரியர் பி.நரசிம்மாவுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு செய்திப்பிரிவில் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முத்தரசன் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மூத்த பத்திரிகையாளர் என்.ராமுக்கு இந்திய பத்திரிகை கவுன்சில் ராஜாராம் மோகன் ராய் விருது வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விருது பெறும் என்.ராமுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறியுள்ளார்.

Next Story