சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 22 Nov 2018 6:55 AM GMT (Updated: 22 Nov 2018 6:55 AM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டு இருப்பதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.  இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்தது. அடுத்து 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழுக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் இடைவெளி விட்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 17% குறைந்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 45% மழை பதிவு குறைந்துள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய் வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை என்று எதுவும் இல்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக சோழவரம் மற்றும் மாதவரத்தில் தலா 12 செ.மீ மழைப்பதிவானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story