11 நாட்களாக நிவாரண முகாமில் அல்லல்படும் டெல்டா மக்கள் வீடு திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறார்கள்


11 நாட்களாக நிவாரண முகாமில்  அல்லல்படும் டெல்டா மக்கள்  வீடு திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறார்கள்
x
தினத்தந்தி 25 Nov 2018 10:00 PM GMT (Updated: 25 Nov 2018 9:27 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் 11 நாட்களாக அல்லல்படும் மக்கள் வீடு திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர்,

‘கஜா’ புயலின் தாக்கத்தை நேரில் பார்க்கும்போது, ‘இதற்கு மேலும் எங்களுக்கு ஒரு துயரம் வேண்டுமா?’ என மக்கள் கேட்பதுதான் நமது காதுகளில் ஒலித்த வண்ணம் உள்ளது. கடந்த 15-ந் தேதி நள்ளிரவு ருத்ரதாண்டவம் ஆடத்தொடங்கிய கஜா புயல் பல மணி நேரம் சுழன்று அடித்ததில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் உள்நாட்டு அகதிகளாகி விட்டனர்.

வீடுகளை இழந்தவர்கள், வீடு மேற்கூரைகளை இழந்தவர்கள், வாழை தோட்டத்தை தொலைத்தவர்கள், தென்னந்தோப்புகளை பறிகொடுத்தவர்கள், உறவுகளை பலி கொடுத்தவர்கள், படகுகளை இரையாக்கியவர்கள் என பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. எத்தனை நிவாரண முகாம்களை அமைத்தாலும், எத்தனை டன் உணவு சமைத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதவில்லை எனும்போது புயலின் தீவிரத்தை அறியமுடிகிறது.

பாதிப்பு பலமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்த அரசு டெல்டா மாவட்ட பகுதிகளில் நிவாரண முகாம்களை அமைத்து பல ஆயிரக்கணக்கானோரை 15-ந் தேதி இரவே தங்கவைத்தது. எந்த நேரத்தில் நிவாரண முகாம்களுக்கு சென்றனரோ தெரியவில்லை. 11 நாட்களாகியும் அவர்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை. இனி அவர்கள் குடியிருப்பதற்கு இடமில்லாதவர்கள் ஆகிவிட்டனர்.

வீடு, வாசலை இழந்த டெல்டா மக்கள் கையில் தட்டுகளுடன் உணவுக்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கிறார்கள். உணவு தீரும்போது வெறும் தட்டுடனும், கலங்கிய கண்களுடனும் கன்னத்தில் கைவைத்தபடி சோகமே உருவாக திரும்புகிறார்கள். இது தான் நிவாரண முகாம்களின் இன்றைய நிலைமை.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதில் இருந்தே மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. புயலுக்கு பின்னர் படகுகள் சேதமடைந்து கிடப்பதால் இனிமேலும் கடலுக்கு செல்லமுடியுமா? என மீனவர்கள் கேட்கிறார்கள். டெல்டாவின் மீன்பிடி தொழிலை அடியோடு முடக்கிப்போட்டு உள்ளது புயல்.

ஒவ்வொரு மீனவரும் லட்சக்கணக்கில் செலவு செய்தால் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு சென்று மீண்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியும். தென்னை, நெல், மா, பலா, வாழை, வெற்றிலை, கரும்பு, சவுக்கு, நெல்லி, பூக்கள், காய்கறிகள் பயிரிட்டிருந்த விவசாயிகளும் தங்கள் பயிர்களை இழந்து கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனால் விவசாயமும் முடங்கிப்போய் உள்ளது.

வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களை விட்டால் வேறு எங்கு செல்வது? என திக்குமுக்காடி கிடக்கிறார்கள். கிடைக்கும் உணவை சாப்பிட்டு, கிடைக்கும் பொருட்களுடன் ஒவ்வொரு நாளையும் கடத்தி வருகிறார்கள். பெரும்பாலான இடங்களில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் நேற்று 10-வது நாளாக மக்கள் அவதிப்பட்டனர்.

இரவில் விளக்கேற்றுவதற்கு மண்எண்ணெய் கூட கிடைப்பதில்லை என்பது கிராம மக்களின் விரக்தி. மெழுகுவர்த்தி தட்டுப்பாடும் மக்களை பாடாய்படுத்துகிறது.

நிவாரண பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்டால் ஓட்டம் பிடித்து, பொருட்களை வாங்க முண்டியடிப்பதும், நிவாரண பொருட்கள் கிடைக்காவிட்டால் ஏக்கத்துடன் நிற்பதுமாக காவிரி கரையோர பகுதி கண்ணீர் கரையோர பகுதியாக மாறிவிட்டது.

நம்பிக்கையை கைவிடாமல் தன்னார்வலர்களும், அரசு ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து இயல்பு நிலைமை திரும்ப நாள்தோறும் போராடுகிறார்கள். இவர்களின் போராட்டம் விரைவில் வெற்றி பெறும் என்பதே அனைவரின் நம்பிக்கை.

Next Story