சபரிமலைக்கு மாலை அணிந்தது ஏன்? டாக்டர் அன்புமணி ராமதாஸ் பதில்


சபரிமலைக்கு மாலை அணிந்தது ஏன்? டாக்டர் அன்புமணி ராமதாஸ் பதில்
x
தினத்தந்தி 28 Nov 2018 8:15 PM GMT (Updated: 28 Nov 2018 8:15 PM GMT)

சபரிமலைக்கு மாலை அணிந்தது ஏன்? என்பது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில மாதங்களாகவே முகத்தில் தாடியுடன் காணப்படுகிறார். அவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தார்.

முதல்முறையாக மாலை அணிந்ததால் கன்னிசாமியாக அவர் நேற்று மாலை விமானம் மூலம் சபரிமலை புறப்பட்டு சென்றார்.

சபரிமலைக்கு மாலை அணிந்தது ஏன்? என்பது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

என் அம்மாவுக்காக நான் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்கிறேன். அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் போகக் கூடாது என்று எதுவும் கிடையாது. போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 வயதில் இருந்து 50 வயது வரை உள்ள பெண்கள் செல்ல கூடாது என்பது காலம், காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிற ஐதீகம். இதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிடுவது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது-

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டுவதை ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க போவது கிடையாது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதில் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

37 அ.தி.மு.க. எம்.பி.க்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களும் சேர்ந்து கடுமையாக எதிர்க்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக சுப்ரீம்கோர்ட்டு சென்று தடை பெற வேண்டும். மத்திய அரசிடம் கேட்டாலும், எதுவும் கிடைக்காது. ஏனென்றால் மத்திய அரசு தான் வேண்டும் என்று இதை(அணைக்கட்ட அனுமதி) செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story