கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்: 5 வயது மகளை இடுப்பில் கட்டியபடி கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்: 5 வயது மகளை இடுப்பில் கட்டியபடி கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 29 Nov 2018 10:15 PM GMT (Updated: 29 Nov 2018 10:00 PM GMT)

கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்: 5 வயது மகளை இடுப்பில் கட்டியபடி கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

சங்ககிரி,

சங்ககிரி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறால் மனம் உடைந்த பெண், தனது 5 வயது மகளை இடுப்பில் கட்டியபடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது குழந்தையும் பரிதாபமாக இறந்தது.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மஞ்சக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 36), விவசாயி. இவர் ஈரோடு மாவட்டம், பவானி சின்னபுலியூர் கிராமத்தை சேர்ந்த அன்புக்கரசியை(31) கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது மகள் கன்ஷிகா (5) அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். செல்வம்-அன்புக்கரசி தம்பதியினர் அதே பகுதியில் உள்ள மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.

சமீபத்தில் செல்வத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ரூ.50 ஆயிரம் வரை செலவானதாக கூறப்படுகிறது. அதன்பிறகு உடல்நலம் பெற்று திரும்பிய அவர் மது அருந்தி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அன்புக்கரசி கடந்த 27-ந்தேதி மகளுடன் மாயமானார். அவர்களை பல்வேறு இடங்களில் செல்வம் தேடி பார்த்தார். இந்தநிலையில், நேற்று காலை செல்வத்தின் தோட்டத்து கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே அங்கு சென்று பார்த்த பொதுமக்கள், அன்புக்கரசி பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்ககிரி போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று அன்புக்கரசியின் உடலை மீட்டனர். அப்போது அவர் இடுப்பில் கட்டப்பட்டிருந்த சேலையில் அவரது மகளும் கட்டப்பட்டு இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரின் உடல்களும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அன்புக்கரசியின் தந்தை குப்புசாமி தனது மகள் மற்றும் பேத்தி சாவில் சந்தேகம் இருப்பதாக சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story